Tuesday, March 12, 2013

செம்பவம் சிறுகதை

எனக்கு ஏனோ பறவைகளை மிகவும் பிடிக்கும். அதற்காக பறவை ஆராய்ச்சியாளரோ, பறவைகளை காணும் சங்கத்தின் உறுப்பினரோ இல்லை. ஊருக்கு ஒதுக்குபுறமாக

தேரிப்பகுதியிலோ காட்டுப் பகுதியிலோ காற்றுடன், அமைதி  தேடிச் செல்லும் பொழுது அங்கே சுதந்திரமாக சந்தோசமாக திரியும் பறவைகளை கண்டுவிட்டால் என்னையரியாமல் ‘நீங்கள் எல்லாம் இங்கேயா இருக்கீங்க? சொல்லவே இல்ல’ என்று வாய்விட்டு சொன்னதுண்டு.
 ஙஇருசக்கர வாகனத்தில் பயணிக்கும்பொழுது காட்டுப்பகுதியில் சாலையின் நடுவே சிலசயம் யாரோ சிதறவிட்ட தானியங்களை பொறுக்கியபடி பறவைக் கூட்டம் நிற்பதுண்டு. அவ்வாறு காண நேர்ந்தால் அவைகளை கலைக்காமல் தூரத்திலேயே வண்டியை இரண்டு,மூன்று நிமிடங்கள் நிறுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பதுண்டு. அவை எவ்வித கவலைகளுமின்றி உண்டு மகிழ்வதை கண்டு ரசிப்பதுண்டு. அப்பொழுதெல்லாம் ‘சிட்டுக்குருவிகளைப் பாருங்கள் அவை விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை’ என்ற பைபிள் வசனம் மனதில் வந்து செல்லும். வயல்வெளியை உழும்பொழுது தெறித்து விழும் புழு பூச்சிகளை உண்பதற்கு சுற்றி வரும் பறவைக் கூட்டத்தை கண்டு மெய்மறந்ததுண்டு. 
 
ஆனால் சில நாட்களாக நான் அடிக்கடி காண்கிற காட்சி  என் நெஞ்சை பிசைய வைக்கிறது. சூரியன் விழித்து  வெகுநேரம் கழித்து விழித்து அவசர அவசரமாக கடன்முடித்து, குளித்து, உடுத்தி, உண்டு மனைவி தரும் மதிய உணவை வண்டி பெட்டியில் திணித்து, அலுவலகம் நோக்கி பாயும் ஜாதியை சேர்ந்தவன் நான். 15 கி.மீ சாலையில் தினமும் சென்று வருகிறேன். ஓராண்டுக்கு முன்னர்தான் அந்த சாலையை இருவழிச் சாலையாக அகலப்படுத்தினார்கள். சாலை அகலப் படுத்தப்பட்டதிலிருந்து அடிக்கடி உயிரினங்கள் அடிபட்டு சாவது சகஜமாகிவிட்டது. பெரிய திட்டங்களை அரசு தீட்டும் பொழுது சுற்றுசூழல் அலவலர்கள் எதிர்ப்பார்கள் இவர்களுக்கு வேறு வேலையில்லை என்று இகழ்ச்சியாய் நினைத்ததுண்டு. அது எவ்வளவு உண்மை என்று நேரில் காணும்போது புரிகின்றது.

மூன்று நாட்களுக்கு ஒரு முறையாவது அந்த காட்சியை          காண்கிறேன். குறிப்பிட்ட ஒரு பறவை அடிபட்டு கிடக்கிறது ஏன் இந்த பறவை மட்டும் அடிக்கடி அடிபட்டு சாகின்றது என்று புரியவில்லை. அதன் பெயரும் தெரியவில்லை. ஒரு நாள் ஆனந்தபுரம் தாண்டியவுடன் ஒரு நாள் தைலாபுரம் ஓடைக்கருகில் பல இடங்களில் பார்த்ததும் மனம் பதறுகிறது. சிலநேரம் இறங்கி இறந்த பறவையை சாலையோரம் போட்டுவிட்டு செல்வேன். பல நேரம் நேரமின்மையால் கடந்து சென்றுவிடுவேன். மாலை திரும்பி வரும்பொழுது இறைக்கை சிதறி மாமிச சிதறலாய் கிடக்கும். அன்று இரவு தூக்கம் வராது. ஏன் அந்த இனம் மட்டும்? இயற்கை ஆர்வலர் அந்தோணிராஜாவுக்கு போன் செய்து விசயத்தை சொன்னேன். அந்த பறவையின் அடையாளத்தை கேட்டார். பழுப்பு நிறத்தில் உள்ளது. காக்கையை விட பெரியது. வால் நீளமாயுள்ளது என்று கூறினேன்.

‘ஆங் அதன் பெயர் செம்பவம் என்று கூறுவார்கள். செங்காகம் என்பது தான் பேச்சு வழக்கில் செம்பவம் என மருவியிருக்கும் என்பது என் கருத்து’ வயல்வெளியில் வேலியோரங்கள் திரியும் கரட்டான் என்ற சிறியவகை ஓனான்தான்  இதன் முக்கிய உணவு இந்த பறவையால் உயரமாகவோ, வேகமாகவோ பறக்க முடியாது. அதனால் தான் ரோட்டை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு சாகின்றது. தகுதியுள்ளது தப்பி பிழைக்கும் என்று முடித்தார்.

மனிதனின் சுயநலத்தினாலும் அந்த வளர்ச்சியாலும் ஒரு இனம் அழியும்போது இந்த வாசகம் எப்படி பொருந்தும்?

இரண்டு வாரமாக அந்த காட்சியை காணமுடியவில்லை தெரியவில்லை. ஒருவேளை செம்பவம் வாழும் தகுதியை பெற்றுவிட்டதா அல்லது இந்த பகுதியில் அந்த இனமே அழிந்து விட்டதா இன்று காலை எங்காவது தென்படுகிறதா என்று வேலியோரங்களால் கவனித்தபடி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். ஆனந்த இசக்கியம்மன் கோவிலை தாண்டி ஒரு திருப்பத்தில் அட சட் சுதாரித்து பிரேக் போடுவதற்குள் என் சக்கரத்தில் சிக்கி நசுங்கியது ‘செம்பவம்’.’

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.